மனம் எப்படி அடைத்துக்கிடந்தால் என்ன. எவ்வளவு சஞ்சலப்பட்டால் என்ன… எந்த உணர்வுகள் ஆட்டிப்படைத்தால் என்ன. ஒரு வாக் போங்க.. பத்தலையா பக்கத்து ஊருக்கு போயிட்டுவாங்க.. இயற்கை அன்னை மடியில் தவழ்ந்துவாங்க. சரியாப் போயிடும்.
சரி.. சரி சாம்பிராணி போதும். பயணத்திற்கு வருவோம்.
சகோதரி வீட்டிற்குச் சென்று போட்டா ஆல்பங்களைக் கொடுக்க வேண்டி இருந்தது. இந்த காரணம் பத்தாதா வண்டியை முடுக்க..??? இந்த பசங்களுக்கு ஒரு காரணம் கிடைச்சா போதும் ஊரு சுத்த என்று முன்னர் ஒரு முறை சாம்பிராணி காட்டியிருந்தேன். ஆனால் இந்த பயணம்
ஆச்சரியம் தரும் வகையில் மலை ஏற்ற பயணமாக மாறியதுதான் விந்தை. காலை 3-30க்கு அலாரம் வைத்துவிட்டு 4-45 மணிக்கு தவறாமல் எழுந்தாச்சு.. !! சரியாப் போச்சு கட கட வென காலைக்கடன்களை முடித்துவிட்டு சாப்பிட்டுப் போகச்சொன்ன தாயாரைக் அமர்த்திவிட்டு
கையில் கிடைத்த மோர்புட்டியை காலி செய்துவிட்டு கிளாடியை எழுப்புகிறோம். பீர் அடித்துவிட்டுதான் வண்டி ஓட்டக்கூடாது. மோர் அடிச்சிட்டு ஓட்டலாம்தானே. அவசரத்தில் அர்த்தம் உண்டு. சூரியன் சுட ஆரம்பிப்பதற்குள் ஊர் போய் சேரவேண்டும். புதுக்கோட்டை – ஒட்டன்சத்திரம் 3 முதல் 4 மணி நேரப்பயணம்.
Pudukkottai – Dindigul
அதிகாலை பயணம் ஆரம்பமாகிறது. பாதாள சாக்கடை செய்கிறேன் என்று புதுகையைப் பிளந்திருக்கிறார்கள். தவழ்ந்துகொண்டே திருவப்பூர் தாண்டவே மணி 5-30 ஆகி விடுகிறது. எதிரில் வந்த ஏடிஎம் அறைக்குள் சென்று இருந்ததை லவட்டி திரும்புகிறோம். பாவம் அந்த காவலாளி.
அதிகாலை தூக்கத்தை ஏசி ஏடிஎம் அறைக்குள் அனுபவித்துக் கொண்டிருந்தார். அவர் தூக்கத்தை கலைக்க வேண்டியதாயிற்று.
நம்ப ரூட் இதுதான். புதுகையிலிருந்து மணப்பாறை அங்கிருந்து NH 45 பிடித்து திண்டுக்கல். அங்கிருந்து NH 209 ஒடவை மாநகர் வரை! முந்திய நாள் பெய்த கொஞ்ச மழையால் பயணம் சில்லிப்பாய் இருந்தது. மணப்பாறை சாலை ஒரு காலத்தில் சிங்கிள் ரோடு. வண்டியில்
பறந்தால் அக்கு அக்காக பிரிந்து போவது நிசம். தற்போது நெடுஞ்சாலைத் துறை கைவசப்படுத்திய பிறகு சிறப்பான இரு வழிச்சாலையாக மாறி உள்ளது. முசிறியில் தொடங்கி குளித்தலை மணப்பாறை புதுக்கோட்டை கடந்து சேதுபாவாசத்திரம் என்று கிழக்குக் கடற்கரை வரை இந்த
சாலை ஒருங்கிணைக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வழியில் அசத்தலான ஒரு சூரிய உதயம் அத்தோடு சாலை கடந்த ஒரு பாம்பூஊஊஊஊ…. என்று பயணம் சுவாரசியமாய் போகிறது. வழியில் ஒரு அரோகரா.. விராலிமலை முருகன் கோயில் அடிவாரத்தில் பயணிக்கும் போது
ஆண் பெண் மயில்கள் என்று ஒரு பட்டாளம் சாலையைக் கடக்க நின்று ரசித்துவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்கிறோம். விராலிமலை ஒரு பராமரிப்பு இல்லாத மயில்கள் சரணாலயம்.
7 மணிக்கு மணப்பாறை கடந்ததும் (58 KMs @ 1 hr and 30 mins) ஒரு போன் அழைப்பு.. அதைத் தொடர்ந்து இயற்கை அழைப்பு (உச்ச்ச்சாஆஆ). திரும்ப தொடரும் பயணம் NH 45 பிடித்து தொடர்கிறது. அடுத்த 60 கிமீ.. இந்த வழிதான். நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து
வருவதால் ஏகப்பட்ட take diversion போர்டுகள். ஆனால் பணிகள் முடிந்த இடத்தில் பள பள வென்ற சாலையில் பறக்க முடிகிறது. இளம் சூரியன்.. சில்லிப்பான ஆனால் காதுக்குள் இறைச்சலையும் கண்ணில் நீரையும் வரவழைக்கும் காற்று.. காலையில் டிராபிக் அல்லாத நான்கு
வழிச்சாலை என்று அசத்தலாக திண்டுக்கல் பைபாஸ் வந்து சேர்கிறோம். (69 KMs @ 1 hr and 15 mins)
இங்கிருந்து வலப்புறம் பழநி சாலையில் பிரயாணிக்க வேண்டும். நீங்களே சொல்லுங்க.. அடுத்த அரை மணிநேரத்தில் இந்த அருமையான பயணம் முடிய வேண்டுமா என்ன.. ?!?! ம்ஹூம்.. மனம் இன்னும் போலாம் என்கிறது.. கொடைக்கானல் 92 என்கிற போர்டு பித்துப் பிடிக்க வைக்கிறது. சகோதரி வீட்டிற்கு போன் அடித்து மதிய உணவிற்கு வருவதாகக் கூறிவிட்டு…. சர்ர்… நேரே செல்கிறோம்.
Dindigul – Pannaikkadu
அடுத்த இரண்டு பிரம்மாண்ட மேம்பாலங்கள் கடந்து தேனி சாலை சந்திப்பு. வலப்புறம் திரும்பி (NH45 Extn) வண்டியைத் தாலாட்டுவது போன்ற சாலையில் விரைகிறோம்.. 60த் தாண்டவில்லை. திட்டமிடாத பயணம் என்பதால் வண்டிக்கு எண்ணை பத்தாது. செம்பட்டியில் கொஞ்சம் நிறப்பிக் கொள்கிறோம். அட ஏங்க நம்பர் பிளேட்ட இவ்வளவு ஏத்தி வெச்சிருக்கீங்க என்று பாசமுடன் விசாரிச்சாப்ள பெட்ரோல் பாய்.. நான் என்னத்த
கண்டேன்.. இப்டித்தாண்ணே இந்த வண்டில வந்திச்சு…
வத்தலகுண்டு தாண்டி கொடைக்கானல் மலைரோடு பிரிவிற்கு வருகிறோம். தாமதம் தேவையில்லை…. பயணம் தொடர்கிறது. கொஞ்ச தூரம் புளிய மரங்கள் சூழ்ந்த சமவெளிச்சாலை கடந்து மலைப்பாதையில் ஏற ஆரம்பிக்கிறோம்.
முந்தைய ஊட்டி பயணம் கை கொடுப்பதை உணரமுடிந்தது. சரியான கியர்.. சீரான ஓட்டம். ஆதலால் தடுமாற்றம் இல்லாமல் எதிரில் வரும் வாகனங்களை சமாளிக்கவும் சக வண்டிகளைத் தாண்டவும் உதவியாய் இருந்தது. நமக்கும் எத்தன்கள் முன்னே பறக்கிறார்கள். ஆபத்தான வேகம்!
(09:15AM 43 KMs @ 1 hr )
அங்கும் இங்குமாக வந்த நிழல் குளிரைத் தருகிறது.. பக்கவாட்டில் பள்ளத்தாக்கின் காட்சி மகிழ்வைத் தருகிறது. சரசரவென மேலே ஏறுகிறோம். வெள்ளைக்காரன் போட்ட பாதையாம். கொண்டை ஊசிகளையே காணோம். ஆங்காங்கே வண்டியை நிறுத்தி மக்கள் இயற்கையை அனுபவிக்க நாமும் அங்கங்கு நின்று போட்டாக்களைச் சுட்டுச் செல்கிறோம். ஏறுகையில் 30 முதல் 40. சமநிலத்தில் 60. அதைத்தாண்டிப் போவதில்லை உறுதியாக ஒத்துழைக்கிறது கிளாடி!
பயண வழி மாறியதை சொல்லவிட்டேன்.
திண்டுக்கல்லில் மாறிய இந்த வழி வத்தலகுண்டு வழியாக கொடைக்கானல் மலைப்பாதையில் சென்று பண்ணைக்காடு பிரிவில் திரும்பி பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பாச்சலூர் ஒட்டன்சத்திரம் என்பது நமது புதிய பாதை.
ஊத்து பண்ணைக்காடு பிரிவு வரை வழக்கமான மலைப்பாதை.. அதாவது டிராபிக். அதிகம் பார்வையைக் கவராத காடு என்று. கொடைக்கானல் சாலையில் திரும்பி பண்ணைக்காடு பிரிவில் திரும்பியதும் வித்தியாசம் தெரிகிறது. பாதை சில இடங்களில் பெயர்ந்திருந்தாலும் பல இடங்களில் பட்டையைக் கிளப்புகிறது.
சாலையில் ஓரம் தெரியாத வண்ணம் புதர்கள் மூடிக்கிடக்கின்றன. வெகு சில நிமிடங்களிலேயே பண்ணைக்காடு அடைகிறோம். ஊர் …. கொஞ்சம் புழுதிபடிந்து அசிங்கமாக இருந்தாலும் வித்தியாசமானகத்தான் இருக்கிறது.
Pannaikaadu – Thandikudi
இங்கே வழி கேட்டுக்கொள்வோம்.
அண்ணே பாச்சலூர் போறது எப்டிண்ணே..?
கிராமத்து வாசியான அந்த வயதான சகோதரர் சிறப்பாக வழிகாட்டுகிறார்.
இப்டியே ஒரே ரோடுல போனா தாண்டிக்குடி. அங்க ரைட்ல திரும்பினியன்னா மங்களங்கொம்பு, தடியன்குடிசை. தடியன்குடிசையில லெப்டு திரும்பினியல்னா கேசிபட்டி அங்க லெப்டு திரும்பினா தாண்டிக்குடி….
எந்த ஊரு போகணுமாமா? உள்ளே இருந்த ஒரு தையல்காரர் கேட்க பாச்சலூரு பாச்சலூரு என்று பதில் சொல்ல.. சரி அப்டியே போங்க என்று அனுமதி! அளித்தார்.
திரும்ப விரைகிறோம். காய்கறி டிராக்டர் ஓட்டை உடைசல் வண்டி என்று சில வாகனங்கள் தென்பட்டாலும் பண்ணைக்காடு சாலை மாதிரி மக்கள் தலை தென்படவில்லை. ஒரு ஏகாந்தம் மெல்ல மெல்ல சூழ்கிறது.
யாருமில்லாத அந்த மலங்காட்டினுள் சீறிச் செல்லும் கிளாடியைத் தட்டிக் கேட்க ஆளில்லை. ஓர் முக்கத்தில் ஆரன் அடிக்காமல் மிரட்டுகிறது ஒரு RMTC. நம்மை ஒரு மனிதனாகவே மதிக்காமல் சாலையிலிருந்து இறக்கிவிட்டு செல்கிறது. சமாளித்து சரசரவென விரைகிறோம்.
தாண்டிக்குடி ஊராட்சி உங்களை வரவேற்கிறது என்கிற பலகை வரவேற்கிறது.
அவ்விடம் ஓர் வளைவு.. வளைந்தவுடன் வ்வ்வ்வாவ்!! அருமையான ஒரு பள்ளத்தாக்கு வியூ பாயிண்ட். பள்ளத்தாக்கு ஓர் அணைக்கட்டில் சென்று முடிகிறது. அத்துடன் கண்ணுக்குத் தெரியும் தூரம் வரை பசுமை.. அவ்விடம் சிறிது நேரம் நின்று அசுவாசப்படுத்திக்கொள்வதுடன் கிளாடியை அழகழகாக படமெடுத்துக் கொள்கிறோம்.
தொடரும் பயணம் தாண்டிக்குடியில் நிற்கிறது. இங்கே வலது புறம் திரும்பவேண்டும். எதிரில் வரும் ஜீப் ஓட்டுநரிடம் கன்பர்ம் செய்து பயணம் தொடர்கிறோம்.
Thandikudi – Pachaloor, Unforgettable journey!
இருபுறமும் பச்சைப் பின்புலத்தில் பகட்டான நிறத்தில் பூக்கள். அசத்தலோ அசத்தல். ஏற்ற இறக்கம் சர சர வென பாய்கிறோம்.
பயணம் சற்று நீள்வதாக எண்ணம் தோன்றுகிறது. ஏனென்றால் பல மலைகள் ஏறி இறங்குவதாக உணர்வு சொல்லுகிறது. எதிரில் கேட்ட கொள்ள மருந்துக்கும் யாருமில்லை. ஓரிடத்தில் சாலை இரண்டாகப் பிரிகிறது.. சுத்தம்.. வலது புற பாதை நன்றாகவும் இடது புறம் சற்று கரடு முரடாகவும் தோன்றுகிறது. நமக்கென்றே கொடுத்து வைத்த மாதிரி ஒரு ஒற்றை டீக்கடை..
அக்கா.. பாச்சலூர் எப்டி போறது..
இப்படி லெப்டுல போங்க..
இல்லீங்கா.. தடியன்குடிசையிலதான் திரும்ப சொன்னாங்க… இங்க எப்டி..
இதுதான் தடியன்குடிசை.. இப்டியே போங்க…
அதிர்ந்து பொய் திரும்பிப்பார்த்தால்… ஆ.. இது ஒரு ஊரா… வியந்தவாறே பயணம் தொடர்கிறோம். சோதனை ஆரம்பமாகிறது. பாதை மோசமாகிறது. சில்வண்டுகள் ரீங்காரமிடும் பாதை. மழைநீர் பாய்ந்து வெட்டிப்போட்ட சாலை. ஆங்காங்கே சேர் சகதி. 2 மற்றும் 3ல் நகர்த்துவது பழகிப் போகிறது. மலைப்பயணம் என்றால் ஒரே பிடியாயார் விர்ர்ர்ரென்று ஏறி….. சர்ர்ர்ரென்று இறங்குபவர்கள் இந்தப் பாதையை முயற்சி செய்து பார்க்கவேண்டும். மலை ஏறி இறங்கி ஏறி இறங்கி.. அடக்கடவுளே எப்படா ஊர் வரும் என்று ஆகிவிடும்.
தடியன்குடிசை தாண்டி ஏகாந்தத்தின் உச்சம். அடர்ந்த கானகம் அடிவயிற்றில் இருத்து கத்தினாலும் யாரும் உதவிக்கு வராத சூழல். சற்றே உள்ளே கதக் என்று ஒரு இறக்கம். திடீர்னு டயர் பஞ்சர் ஆனா என்ன செய்யறது.. அட. பெட்ரோல் தீந்து போனா என்ன செய்யறது. சரி எதாவது ஒரு மினிலாரி வராதா. பாத்துக்குவம். சமாதானம் சொல்லிக்கொண்டே வண்டியை செலுத்துகிறோம்.
எதிரில் வரும் ஓரிரு வாகன உரிமையாளர்கள் நம்மை விந்தையாகப் பார்க்கிறார்கள். ஓரிடத்தில் திரும்ப சாலைப்பிரிவு.. அடக் கடவுளே.
அண்ணே பாச்சலூர் எப்டிண்ணே…
நேரே போங்க…
அப்ப இது..
இது சுடுகாட்டுக்குப் போறது..
அடப்பாவிகளா.. நடுக்காட்டில யாரைடா எறிக்கப் போறீங்க….
நடுநிசியில் இந்த வனாந்தரம் மிக கொடூரமாகக் காட்சி அளிக்க வேண்டும். U U U என்று எக்கச்சக்கமான கொண்டை ஊசி வளைவுகள். ஒரு வழியாக ஓர் ஊர் வருகிறது. இப்ப பொறுமை பொயிடுச்சு..
அண்ணே.. பாச்சலூரு இன்னும் எத்தணை தூரமிண்ணே.. அழாத குறையாக கேட்க வேண்டிய சூழல்.
நேரா போனா குப்பம்மாபட்டி அங்க இருந்து குறுக்குப் பாதையில போனா சீக்கிரம் போயிடலாம்.
தூரம் தெரியாத அந்த நபரிடமிருந்து விடைபெற்று குப்பம்மா பட்டிக்கு ஏறி இறங்கி வருகிறோம். அங்கே இளவட்டங்கள் தெளிவாக வழியும் தெகிரியமும் கூறி விடை அனுப்பி வைத்தார்கள். இந்த வழில போனா.. கேசி. பட்டி போகம போகலாம். 4, 5 கிலோமீட்டர் குறையும்.. மலையில் 5 கிலோமீட்டர் குறைவது என்றால் சமதளத்தில் 10, 15 கிமீ குறைவதற்கு சமம். இங்க இருந்து 4ஆவது கிலோமீட்டர்ல ஒரு பாலம் வரும். அதுல லெப்டுல திரும்பாம ரைட்டுல திரும்பினா பாச்சலூருக்குப் பக்கத்தில போயிடலாம்..
அடக்கடவுளே. மெயின்ரோடே திகிலைக் கிளப்புதேடா.. குறுக்குப்பாதையில போகச் சொல்றீங்களேடா.. எதிரில முந்தா நா செத்துப்போன ஆவி வந்தா என்னடா பண்ணுவேன்.. இருந்தாலும் நாம யாரு.. குறுக்குப்பாதையிலே… பாடிக்கொண்டே போகிறோம்.
கொடுமை. திரும்ப மலை இறக்கம். பிரேக் மற்றும் முதல் கியரில் இறக்கவேண்டிய அளவிற்கு சரிவோ சரிவு..
ஆனால் இந்த மலையிலும் சாலைகள் இருப்பது மனதிற்கு ஆறுதலைத் தருகிறது. ஒரு வழியாக திரும்ப மெயின்ரோட்டைப் பிடித்து பாச்சலூர் பிடித்து நிற்க நேரமில்லாமல் ஒட்டன்சத்திரம் சாலையில் சர சர வென இறங்குகிறோம்.
Pachaloor – Oddanchatram
சரிவு உணரவைக்கிறது. எலிவேசன் 1200ல் தொடங்கி 500, 400 என்று ஆகிறது. வெட்கை தெரிய ஆரம்பிக்கிறது. வனாந்திரத்திற்கு பதிலாக மூங்கில் காடுகள் தென்படுகின்றன. விவசாய பூமிகள் வருகின்றன. 60ல் சரளமாக ஓட்ட முடிகிறது.
இறுதியில் வெற்றிகரமாக மதியம் 1 மணிக்கு மலைப்பாதைக்கு விடை கொடுத்து ஒடவை மாநகர் வந்து சேர்கிறோம். (30 kms @ 1 hr). தயாராக இருக்கிறது.. சாப்பாடு அல்ல.. வசைகள்தான்.. அட.. அவிங்க அப்டித்தான் பாஸ்.. திட்டிகிட்டே இருப்பாய்ங்க…
தொலைவு: 232 KMs – NH 45, 45 Extn, NH 7, state&village roads
அதிகப்படியான வேகம்: Plains – 80@NH 45, hills: 50@பாச்சலூர் – வடகாடு




















interesting route and funny travelogue. keep it up
வருகைக்கும் பொறுமையாக கருத்துரை இட்டமைக்கும் நன்றி திரு செல்வராஜன் அவர்களே.
Pingback: 10000 கிலோமீட்டர்கள், 15 மாதங்கள், இரண்டு மாநிலங்கள் « மோட்டார் சுந்தரம் பிள்ளை
Pingback: 10000 கிலோமீட்டர்கள், 15 மாதங்கள், இரண்டு மாநிலங்கள் « மோட்டார் சுந்தரம் பிள்ளை
அண்ணே… கலக்கீட்டீங்க…. 10000 கிமீ. தாண்டியதற்கு கிளாடிக்கு வாழ்த்துகள். நிழற்படங்கள் அருமை… பயணம் தொடர வாழ்த்துகள்….
அடடா. வாங்க சென்னைத் தமிழன். நலமா?
மறுமொழிக்கு நன்றி.