என் கிளாடிக்கு வயது ஒன்று முடிந்துவிட்டது. இந்த ஒரு வருடத்தில் யார் பிரிந்தாலும் என்னை விட்டுப் பிரியாத ஒரு உயிரற்ற உயிர் இது. என்னதான் இருந்தாலும் ஒரு வாரம் என்று எடுத்தால் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது என் உயிர் அதன் கையில்தான் உள்ளது! இந்த ஒரு வருடத்தில் என் மகிழ்ச்சி, துயரம், விருப்பு, வெறுப்பு, பணி(னி) என்று அனைத்தையும் பார்த்திருக்கிறது. சூரிய ஒளி விழாத காடு , கானல் நீர் சூடு பறக்கும் ரோடு, பல் கிட்டும் குளிர், மழை, பனி, குளிர் மழை, கடல், சிகரம் என்று அதன் பயணம் ஒவ்வொரு மணித்துளியும் அனுபவிக்கத்தக்கதாகவே இருந்திருக்கிறது. ஒவ்வொரு முறை பிரேக் பிடிக்கையிலும் அதன் மீதான நம்பகம் அதிகரிக்கிறது. ஒவ்வொரு முறை கண்சிமிட்டும் போதும் (tripping) அதன் மீதான தோழமை அதிகரிக்கிறது. ஒரு கண நேரம் மட்டுமே நீடித்தாலும் நிறைய நெடுஞ்சாலை பந்தங்களை காட்டியிருக்கிறது. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அதன் மீதான காதல் பல மடங்கு அதிகரிக்கவே செய்கிறது.
NOVEMBER 2009, 27
2009 ஒர் நாள் மதியம் திடீரென ஊட்டி ஏறினால் என்ன என்று ஓர் எண்ணம் தோன்றியது. அடுத்த ஒரு மணி நேரம்தான். பெரிய கடைவீதி சென்று கையுறை வாங்கியாச்சு. வாரத்தின் கடைசி நாள்.. வேலை ஏதும் ஓடுவதாய் தெரியவில்லை. இரவு படுக்கும் முன்னர் 3 மணிக்கு அலாரம், காமிரா சார்ஜ் என்று சகலத்தையும் முடித்து ஒரு குட்டித் தூக்கம். கொடுமை. 2-30க்கு எல்லாம் முழிப்பு வந்துவிட்டது. இரவு தூங்கும் போது கூட மன அமைதி இல்லாத புண்ணியவான்களில் நானும் ஒருவன். எனவே அதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை.

Travel plan
NOVEMBER 2009, 28
தாமதிக்காமல் காலைக்கடன்கள் மற்றும் ஜ்ஜ்ஜில் என்று ஒரு குளியல். காலை 4 மணிக்கு கிளாடியோடு நான் தெருவில்.! இரண்டு நிமிட நேரம் எஞ்சின் வார்ம் அப். அதன்பிறகு நீலிக்கோணாம் பாளைய சந்துகளில் புகுந்து ESI மருத்துவமனையை அடைகிறோம். முதன் முதலில் மலைப்பாதை ஏறப்போகும் குதூகலத்தில் கிளாடி அம்சமாய் அவிநாசி சாலையை அடைகிறது. கோவை ஏற்கனவே விழிச்சிடுச்சு. ஆனால் பரபரப்பு இல்லாத சாலை காண்பதற்கு இனிதாக இருக்கிறது. எண்பது என்பது எனது நமது எல்லை. அதற்கு மேலும் போகும் அளவிற்கு நமது விளக்கு பத்தாது.
இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது கவலைக்குரிய விசியம்… பின்புறம் விளக்கு அல்லது ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாத வாகனம். ஆடு மாடு நாய் உள்ளிட்ட கால்நடைகள். மிதிவண்டி. பாதை கடக்கும் மனிதர்கள். ஏனென்றால் குறைந்த விளக்கு வெளிச்சத்தி்ல் அதிகப்படியான வேகத்தில் தெரு விளக்குகள் இல்லாத பகுதியில் போகும்பொது இவை நம் கண்களில் படாது. குறுக்கே வந்தாலும் பிரேக் பிடிக்கும் அளவிற்கு நமக்கு அவகாசம் இருக்காது.
காலட்சேபம் இருக்கட்டும். நவஇந்தியா லட்சுமி மில் என்று எரிச்சல் ஏற்படுத்தும் சிக்னல்கள் அனைத்தும் இப்ப நிற்க வேண்டிய அவசியமே இல்லையே. வெகு விரைவில் கோவை மேம்பாலம் ஏறி இறங்கி (பகல் நேரத்தில் ஏறினா மாமா பிடிச்சுப்பார்) மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பிரிகிறோம்.
கோவை – மேட்டுப்பாளையம்
அப்போதைய மழையினால் ஊட்டிக்குச் செல்லும் பிரதான சாலை அடைக்கப்பட்டுவிட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். எனவே கோத்தகிரி வழியாக ஊட்டி செல்ல திட்டம். அதிகாலை கோவை பேருந்து நிறுத்தங்களில் நிற்கிறது. மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள் மக்களை அடைத்துக் கொண்டு கிளம்புகின்றன. ஆனால் சாலை (NH 67) எதிர்பார்த்த அளவு இல்லை. சில இடங்களில் இது தேசீய நெடுஞ்சாலைதானா என்று வியக்க வைத்தது. அந்த அளவிற்கு பள்ளம் படுகுழிகள்.
கவுண்டம்பாளையம் தாண்டியதுமே காற்றின் ஈரப்பதத்தில் வித்தியாசம் தெரிந்தது. அதிக நேரம் தாக்குப் பிடிக்க இயலவில்லை. டனால் தங்கவேலு சொல்றது மாதிரி எலும்பு வரைக்கும் எட்டிப்பார்த்து குளிரத் துவங்கியது. பெரிய நாயக்கன் பாளையம் வந்ததும் வண்டியை நிறுத்தி ஜெர்கின். கையில் உறையை அணிந்தபின் ஓரளவு தாக்குப் பி்டிக்க இயலுகிறது. என்றாலும் கால்களில் இன்னும் ஆட்டம் இருக்கத்தான் செய்கிறது. தாக்குப்பிடிக்க இயலுமா என்ற சந்தேகம் இருந்தாலும் எதுவரை முடிகிறதென்று பார்ப்போம் என்று முன்னேறுகிறோம்.
வழக்கம்போல லாரி ஓட்டுனர் அன்பர்கள் உயர்த்திய ஒளி வெள்ளத்தில் கண்களை நோகடிக்கிறார்கள். சிலர் மிரட்டவும் செய்கிறார்கள். மற்றபடி அனைத்து ஓட்டுநர்களும் நமக்காக வெளிச்சத்தைக் குறைக்கவே செய்கிறார்கள். ஒவ்வொரு ஊருக்கும் பெயர் பலகைகளைக் காண முடியவில்லை. அத்தோடு குண்டும் குழியுமாய் ரோடு.. வண்டி 60ஐத் தாண்டவில்லை. காரமடையில் ஒரு படுகுழியில் இடறி விழ எத்தணிக்கிறோம். எரிச்சல் ஊட்டுவதாய் உள்ளன இந்த சாலைக்குழிகள்.
அப்படி இப்படி என்று 5-15க்கு மேட்டுப்பாளையம் வந்து சேர்கிறோம். (49 KMs@1:10 hrs). ஒரு டீ போடாமல் சரிப்படாது. அசத்தலாக ஒரு டீ போட்டுத்தந்தார் அந்த அண்ணாச்சி. கடையில் அதிகாலையில் புகைப்பவர்களை விரட்டி அடித்தார் அந்த மனிதருள் மாணிக்கம். அவரிடமே கோத்தகிரி பிரிவிற்கு வழி கேட்டு கடையை விட்டு வெளியே வருகிறோம்.
மேட்டுப்பாளையம் – கோத்தகிரி
இன்னும் விடிந்த பாடில்லை. ஒரு வித பயம் மனதைக் கவ்வுகிறது. அதிகாலையில் மலை ஏறனும்னு நெனச்சொம். ஆனா அர்த்த ராத்திரியா இருக்குதே ஆண்டவா.. என்றாலும் என்னதான் வருது பார்த்திடுவோம் என்று திரும்ப வண்டியைக் கிளப்புகிறோம். (5 30). கடைக்கார அண்ணாச்சி சொன்னபடி பக்கத்திலேயெ பவானி பாலம் அதை அடுத்து கோத்தகிரி பிரிவிற்கு வந்து சேர்கிறோம். இங்கே நாம் வலது புறம் பிரிய வேண்டும். நேரே செல்வது சேதமடைந்த ஊட்டி பிரதான சாலை.
Bhavani Bridge - Kothagiri pirivu
ஆனால் பிரிந்த சாலை … ஆகா.. அற்புதம். நீண்ட நெடிய நேரான சாலை. அதுவும் பக்கா ஸ்மூத்… இரு புறமும் ஆள் மட்டத்திற்கு புதர்கள். மரங்கள் செடி கொடிகள். ஜில்லென்று அடிக்கும் மலைக்காற்று மனதைப் பித்தாக்குகிறது. இன்னும் விளக்கின் வெளிச்சம் போதவில்லை. அதனால் வண்டியும் 60ஐத் தாண்டவில்லை.
அங்கே ஒரு அறிவிப்புப் பலகை இருக்கிறது. என்ன விசேசம்,?? வன விலங்குகள் நடமாடும் பகுதி. Animals crossing… சுத்தம். சப்த நாடியும் அடங்கியே விட்டது என்றுதான் சொல்ல வெண்டும்.. இதைப் பற்றி யோசிக்காமல் விட்டோமே.. வடை போச்செ… யானை காட்டெருமை என்று செய்தித் தாட்களில் படித்த கதைகள் அனைத்தும் மனதில் ஓடுகின்றன. சரி வரது வரட்டும். ஏதாவது குறுக்கே வந்தால் ஒரு U… அப்படியெ திரும்பி வந்திடலாம்னு அடுத்த அசட்டு நம்பிக்கையில் தொடர்ந்து செல்கிறோம்.
எதிரே ஒரு ராட்சத உயரத்திற்கு ஒரு கருப்பு உருவம்.. வானத்தையே மறைக்கிறது. ஆம். அதுதான் நாம் ஏறவேண்டிய மலை. அதில் அங்கங்கே கீற்றாய் ஒளி வெளிச்சம். ஆங்காங்கே உள்ள வீடுகள் மற்றும் வளைவுகளில் திரும்பும் வாகனங்களில் ஒளி. அந்த நேரத்து மனதின் உணர்ச்சியை வர்ணிக்க இயலாது. காத்திருந்த கனவு அல்லவா. அதும் அப்படி ஒரு இருட்டு ஏகாந்தத்தில் அப்படி ஒரு காட்சி. வ்வ்வ்வாவ்!! என் ஆசை பல மடங்கு அதிகரித்தது. அடுத்த ஒரு சில விநாடிகளில் மலைப்பாதையில் கிளாடி ஏறத்துவங்குகிறது. மலைப் பாதையில் முதல் முறை அல்லவா.. அதிக ஆர்வத்துடனும் அதைவிட அதிக கவனத்துடனும் வண்டியைச் செலுத்துகிறோம். tripping lights, horn at turnings!
மலை மேலிருந்து கீழே நகரின் காட்சி ரம்மியமானது. அவ்வப்போது கண்களுக்கு விருந்தானது.
The view of Mettupalayam town from the hill
இதோ கொண்டை ஊசி வளைவுகள் வந்துவிட்டன. முதல் இரண்டு திருப்பங்களில் செய்த தவறுகளில் சரியான கியர் புரிபடுகிறது. அசத்தலாக ஏறுகிறோம். நமக்குத் துணையாக பேருந்து டாங்கர் லாரி மற்றும் கார்கள் வருகின்றன. அது பிடிக்கவில்லை. சமயம் கிடைக்கையில் அவற்றை முந்திச் செல்கிறோம்.
இரண்டாவது வளைவில் திரும்பும்போது கீழ்வானம் சிவக்க ஆரம்பிக்கிறது. இதுதான் சரியான நேரம். இதற்காகத்தான் அதிகாலையிலேயே கிளம்பினோம்.
பொதுவாக மலை ஏற்றம் இந்த நேரத்தில்தான் துவங்கவேண்டும் என்பது என் அழியாத ஆசை! - கோத்தகிரி சாலை
சாலை சிறப்பாக உள்ளது. அறிவிப்புப் பலகைகள் 500 1000 என்று உயரத்தைக் காட்டும் நடுகல் என்று நமது பயணம் மிகவும் ஆர்வமாக உள்ளது. கோத்தகிரிக்கு 12 கிமீ தொலைவு இருக்கும்போது ஒரு ஆழமான பள்ளத்தாக்கு கண்களுக்கு விருந்தாகிறது. அதிகாலை வேளையில் தேயிலைக் காடுகளுடன் அந்தப் பள்ளத்தாக்கைப் பார்க்க யாருக்கும் ஆசை வரவே செய்யும். ஆனால் நினைத்தபடி பனி மேகங்கள் உருவாகவில்லை. வரிசையாக தேயிலைத் தோட்டங்கள் வர பயணம் இன்னும் இனிமையானதாகிறது.
மலை ஏறியதும் 1000 மீட்டர் உயரத்திலிருந்து மரங்களைக் காணமுடிவதில்லை. அனைத்து மலைகளுக்கு தேயிலைப் பச்சைப் பட்டாட தான்! - கோத்தகிரி சாலை
உச்சா போவதற்காக ஓரிடத்தில் கிளாடியை நிறுத்திய போதுதான் சூரிய உதயத்தைக் கவனித்தேன். அடடா. இவனைக் கவனிக்காமல் விட்டோமே… அந்த சூரிய உதயம் மறக்கமுடியாத ஒன்று. அத்துடன் ஒரு காட்டெருமை தேயிலைக்காட்டுக்குள் ஓடிவருகிறது. கலவரமாகி ஓடி ஒளிகிறோம்.
போகும் வழியில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களைப் பார்க்கிறோம். அவற்றில் இதுவும் ஒன்று.
மேட்டுப்பாளையம் – குன்னூர் – ஊட்டி சாலை கேத்தி அருகே ஒட்டு மொத்தமாக சேதமடைந்துள்ளது. கோத்தகிரி ஊட்டி சாலையிலும் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
அதிக சிரமம் இன்றி குட்டி சுவிச்சர்லாந்து என்று புகழப்படும் கோத்தகிரி வந்து சேர்கிறோம். வாழ்வதற்கு அருமையான இடம். அமைதியான ஊர். சுத்தமான உள்ள இதன் வீதிகள் நல்ல அகலமாகவும் உள்ளன. பக்கத்தில் ஒரு மார்க்கெட்டில் புத்தம் புது காய்கனிகள் கண்களைப் பறிக்கின்றன. ஊட்டி இங்கிருந்து 20 கி.மீதான். எதிரில் வந்த அண்ணாச்சியிடம் எதற்கும் ஒரு வார்த்தை கேட்டுகிடலாம்.
ஏனுங்னா.. ஊட்டிக்கு எப்படி போறது…
இந்த லெப்ட் திரும்பினா ஒரே ரோடுதான். ஆனா வண்டி போகலைன்னு சொல்லுறாங்க. அதோ அந்த லாரியப் பாருங்க. (மாற்றுப்பாதையில் செல்லும் ஒரு வாகனத்தைக் காட்டுகிறார்). அதுவழியே போகலாம். கொஞ்சம் சுத்துதான்.. ஆனா அதான் இப்ப இருக்கற ஒரே வழிங்க…..
குழம்பியவாறே மாற்றுப்பாதையில் செல்கிறோம். (நான் செய்த ஒரே தவறு. அந்த அண்ணாச்சி பேச்சக் கேட்டதுதான். கனரக வாகனங்களுக்கு மட்டும்தான் தடை என்று திரும்பி வருகையில் தெரிந்து கொண்டேன்..)
கோத்தகிரி – இடுஹட்டி – ஊட்டி
மாற்றுப்பாதை இதுதான். கோத்தகிரி – இடுஹட்டி – கொதுமுடி – தொட்டபெட்டா – ஊட்டி. எச்சா 20 – 30 கிமீ. சாலை பட இடங்களில் சிதலமடைந்துள்ளது. சில இடங்களில் குண்டுக்கற்கள் மட்டுமே சாலைகளாக உள்ளன. இன்னும் சில இடங்களில் சகதி மற்றும் சேர். அது தாண்டியதும் காய்ந்து போன சகதியிலிருந்து கிளம்பும் பொடி மண் புழுதி. இன்று சரியான offroading exercise!
என்றாலும் இந்த சாலை அவ்வளவாக போக்குவரத்தில் இல்லாத காரணத்தால் அதிகம் மாசுபடாமல் இருக்கிறது. பனி நீர் வடியும் புல்வெளி. பனி ஆவியாகும் தேயிலைத் தோட்டங்கள். மிகவும் அழகான பயணம். அத்துடன் குறுகிய வளைவுகள் செங்குத்தான மேடு மற்றும் பள்ளங்கள்.
இந்தப் பாதை அதிகம் கால்தடம் பதியாதது. பனிப்புகை மண்டலங்கள், சாலை இரு புறமும் புல் மேடு வேலிகளுடன் தேயிலைத் தோட்டங்கள் - கோத்தகிரி இடுஹட்டி சாலை
இருக்கும் ஒற்றைச் சாலையில் ஒரு லாரி நின்றுவிட போக்குவரத்து சுத்தமாக நின்று போகிறது. கிளாடிக்கு கடுமையான சோதனை. 2 3 என்று கியர்கள் அடிக்கடி மாற்றி போக்குவரத்து நெரிசலைக் கடக்கிறோம். கொதுமுடி வரை ஏகாந்தமான பயணம்தான். வழி ஏதும் தவறி விட்டோமோ என்று குழம்பும் அளவிற்கு ஒரு ஈ காக்கா துணைக்கு வரக் காணோம்.
தொட்டபெட்டா சிகரம்
கொதுமுடி தாண்டியதும் அடிச்சுபிடிச்சு தொட்டபெட்டா பிரிவு வந்து சேர்கிறோம். இனி பழக்கப்பட்ட சாலைதான். சற்றும் தாமதிக்காமல் தொட்டபெட்டா சிகரம் நோக்கி வண்டியை ஏற்றுகிறோம். சாலை பல இடங்களில் காணோம்.
போக்குவரத்துப் பிரச்சினையாலும் பல்வேறு போட்டா படங்கள் எடுத்ததாலும்.. மிகவும் தாமதமாக 8-45 மணிக்கு சிகரத்தை அடைகிறோம். (115 KMs @ 4-45 hrs) இதில் எனக்கு வருத்தம் இல்லை. நான் ரசிக்க வந்ததே இது போன்ற தடம் பதியாத இடங்களைத்தான். சைட் சீயிங் போகும் நினைப்பே இல்லை.
தொட்டபெட்டாவில் கூட்டமில்லை. வியூ பாயிண்டிலிருந்து விரும்பம் போல் படங்கள் எடுத்துக் கொள்கிறோம். சீசன்களில் இது வாய்ப்பே இல்லை.!
கிளாடிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. இந்த இடம் அதன் all time high.
I reached my all time high!!! எப்போ என்னை லடாக் கூட்டிப் போகப் போறே என்று கேட்கும் கிளாடி. என்ன பதில் சொல்ல
ஊட்டி
தொட்டபெட்டாவிலிருந்து சர சரவென இறங்கி 9,35க்கு சரித்திரப் புகழ் !!! படைக்கிறோம். ஊட்டி சாரிங் கிராஸ் அடைகிறோம். (122 KMs@ 5:30 hrs )
அருகில் உள்ள உணவு விடுதியில் காபியுடன் ரவா தோசை வயிற்றுக்கு ஈய்ந்துவிட்டு தாவரவியல் பூங்கா நோக்கி விரைகிறோம். திரும்பும் முன் சில படங்கள் எடுத்துக் கொள்கிறோம்.
ஊட்டி – கோத்தகிரி – மேட்டுப்பாளையம் – கோயமுத்தூர் மறுவழி.
இந்த பயணம் 10-40க்குத் துவங்குகிறது. இந்த முறை நேர்வழியில் செல்கிறோம். மழை பாதிக்கப்பட்ட பகுதியில் பேருந்துகள் மக்களை இறக்கிவிட்டு அந்த இடத்தை வெறும் வண்டியாக கடக்கிறார்கள். கித்தாப்பாக மள மளவென இறங்கி கோத்தகிரி வந்து தாமதிக்காமல் கீழே இறங்குகிறோம். அதிகம் பிரேக் அல்லாமல் கிளச் கட்டுப்பாட்டில் சொகுசாக மலையை விட்டு கீழே இறங்குகிறோம்.
வரும்போது கோத்தகிரி கோமான் ஒருவர் கொடுத்த தவறான தகவலால் இடுஹட்டி போய் சுத்தவேண்டியதா போச்சு! இந்த முறை நேரே கோத்தகிரி. ஆங்காங்கே மும்முரமாய் சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. அடுத்த சீசனுக்குள்ள குன்னூர் பாதை சரியாயிடும்னு ஊட்டிக் காரவுக சொல்றாக
பத்து நிமிட இரண்டு போட்டோ இடைவெளிக்குப் பிறகு 12-20 (57 KMs@1:40 hrs) க்கு மலையை விட்டு கீழே இறங்குகிறோம். அசத்தலான பிக்கப்பில் அடுத்த 10 நிமிடங்களில் பவானி பாலம் வந்து சேர்கிறோம்.
பாலத்திற்குக் கீழே சென்று படங்கள் எடுத்த பிறகு அன்னூர் சாலையில் விரைகிறோம். திரும்ப NH67ல் சென்று குழிகளில் விழ விருப்பம் இல்லை. மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையும் அன்னூர் கோவை சாலையும் பளிங்கு மேடைகள். இது மாதிரியே எல்லாரும் நினைப்பதால் பேயாய் பறக்கிறார்கள். கவனம் சிதறிய வேகம் உயிருக்கும் உடமைக்கும் வேட்டு வைக்கும். எல்லாம் முடிந்து வெற்றிகரமாக 2-30 மணிக்கு மதிய சாப்பாட்டிற்கு ஹோப் காலேஜ் பக்கம் ஒரு ஓட்டலுக்கு வந்து சேர்கிறோம்.
So, to conclude.
245 Kms up and down at 10:30 hrs
Max speed reached
80+@Kothagiri-Mettupalayam,
80@Mettupalaiyam-Annur and Annur-Coimbatore
60@Kothagiri
H A P P Y S U M M E R
உங்களுடன் உடன் வந்தாற்போல் இருக்கிறது இடுகை..
படங்கள் நல்லா வந்திருக்கிறது..
@arivhedeivam
Thanks for taking time in reading this loooong travelog and postng your comments.
A very good journey
@drpkandaswamy1935
Thanks to you sir!
Hi,
Thanks for wonderfull info about கோவை – to – ஊட்டி
Vijay,
Bangalore
Thanks Vijay
very interesting wonderfull journey by.kathir
அன்பின் திரு கதிர்வேல் அவர்களே.
தங்கள் வருகைக்கும் பொறுமையாக கருத்துரை இட்டமைக்கும் நன்றி.
i would like to talk with you friend! can you give me the contact number?
thanking you!
அன்பின் திரு சர்ஃபுதீன் அவர்களே, தங்கள் கரிசனத்திற்கு நன்றி. தங்களை என் கூகுள் அரட்டையில் சேர்த்திருக்கிறேன். தங்களுடன் உரையாட ஆவலுடன் உள்ளேன்.
Pingback: 10000 கிலோமீட்டர்கள், 15 மாதங்கள், இரண்டு மாநிலங்கள் « மோட்டார் சுந்தரம் பிள்ளை
next i ll be with u
நன்றி திரு நந்தா,
தங்கள் வருகைக்கும் பதிலுரைக்கும் நன்றி. வாருங்கள் வாருங்கள் வரவேற்கிறோம்.
nice experienc,e nice photos, take care your health friend
நன்றி திரு இராம்ஜி அவர்களே,
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
Pingback: 10000 கிலோமீட்டர்கள், 15 மாதங்கள், இரண்டு மாநிலங்கள் « மோட்டார் சுந்தரம் பிள்ளை
அருமையான பதிவு! எனக்கு மலரும் நினைவாக அமைந்தது! யமஹாவில் 87- 88களில், நீலகிரி யெல்லாம் சுற்றித் திரிந்தேன்! டால்பின் முனையில் இருந்து, பீளமேடு பி.எஸ்.ஜி டெக் தூரத்தை, 1.30 மணி நேரத்தில் அடைந்ததை மறக்க முடியாது!
நன்றி திரு ராம்மி!
தங்கள் பதிலுரைக்கு நன்றி.
87 88 என்றால் RX100 ல் வலம் வந்தீர்களா?
எனக்கும் இது மலரும் நினைவுகள்தான். 86ல் YEZDI வைத்திருந்தேன். நானும் நண்பனும் ஊட்டி வழியாக தொட்டபெட்டா சென்று வந்தோம். நல்ல அனுபவம். YEZDIக்குப் பின்னர் Yamaha RX100 வாங்கிய பின்னர் மீண்டும் இந்த மலைப் பாதைகளில் பயணம் செய்ய ஆசைப்பட்டும் நிறைவேறவில்லை.
- சிமுலேஷன்
நன்றி சிமுலேஷன் அவர்களே.
யெஸ்டி, ராஜூத் போன்ற hardcore பைக் வைத்து ஏறவேண்டும் என்கிற ஆசையும் இன்னும் நிறைவேறவில்லை. மாறாக அந்த பைக்குகளின் காலம் மலையேறிவிட்டது.
தங்கள் வருகைக்கும், பதிலுரைக்கும் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
this picture are really gretest thankyou koththakiri
very nice in your travel i m going to ooty quickly in three or four days
Enjoy buddy, now a days ooty is mere a concrete forest
it is not greeny.
அருமையான கட்டுரை. இதுபோல் அடிக்கடி பயணம் மேற்கொள்ளுங்கள். அப்படியே இங்கே எழுதிப்போடுங்கள். வாழ்த்துகள்.
Thanks thiru. sathya
super location
நன்றி